Tuesday, July 04, 2006

சிங்கத்தின் கர்ஜனை

இன்று சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள்.

இதோ எனது குருநாதரின் வீரம் நிறைந்த சில வரிகள்:

உலக சகோதரத்துவத்தைப்பற்றி நாம் கேள்விப்படுகிறோம். சமுதாயங்கள் வரிந்துகட்டிக் கொண்டு இதைப்பிரச்சாரம் செய்கின்றன. எனக்கு ஒரு
பழைய கதை நினைவுக்கு வருகிறது. குடிப்பது இந்தியாவில் தவறாகக் கருதப்படுகிறது. இரண்டு சகோதரர்கள் ஒரு நாள் இரவு ரகசியமாகக் குடிக்கத் தீர்மானித்தார்கள். மிகவும் ஆசாரசீலரான அவர்களுடைய மாமா பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். ஆகவே குடிக்கத்
தொடங்குவதற்கு முன்னால், 'நாம் சத்தம் செய்யக்கூடாது, சத்தம் போட்டால் மாமா எழுந்து விடுவார்' என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டாகள்.
பின்னர் குடிக்கத் தொடங்கினார்கள். 'சத்தம் போடாதே, மாமா எழுந்து விடுவார்' என்று ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள். இதையே
ஒருவனைவிட மற்றவன் உரத்துச் சொல்ல ஆரம்பித்தான். சத்தம் அதிகமாகியது, மாமா எழுந்து வந்து எல்லா விஷயத்தையும் கண்டு
பிடித்துவிட்டார். அந்த குடிகாரர்களைப் போலவே நாமும், 'உலகச் சகோதரத்துவம், நாம் எல்லோரும் சமம், ஆகவே நாம் ஒரு புது நெறியை
ஏற்படுத்துவோம்' என்று கூச்சலிடுகிறோம். புதிய நெறியைத் தொடங்கியவுடனேயே சமத்துவத்தை எதிர்க்க ஆரம்பிக்கிறோம். அதன் பிறகு
சமத்துவமாவது ஒன்றாவது!

சத்திரியர்கள் இறைச்சி உண்பதுபற்றிப் பேசுகிறீர்கள். அவர்கள் மாமிசம் சாப்பிட்டார்களோ இல்லையோ, ஆனால் அவர்கள்தான் இந்து மதத்தில்
சிறந்தவையாக உன்னதமானவையாக உள்ள அனைத்திற்கும் தந்தையர். உபநிடதங்களை எழுதியது யார்? ராமன் யார்? கிருஷ்ணன் யார்? புத்தர்
யார்? சமணர்களின் தீர்த்தங்கரர்கள் யார்? ஒரு துண்டு
இறைச்சியை உண்டதால் தமது அருள் வெள்ளத்தை ஒருவன் மீது பாய்சாமல் இருக்கத்தக்க ஒரு நரம்புத்தளர்ச்சி உள்ள நோயாளியா கடவுள்?
அப்படி ஒருவர் கடவுளாக இருந்தால் அவர் ஒரு காசுக்குக்கூட மதிப்புப் பெறாதவர்.

முழுவேலையும் உங்கள் தோள்மீதே இருப்பதாக எண்ணுங்கள். எனது தாய்நாட்டு இளைஞர்களே, இதைச் சாதிப்பதற்காக விதிக்கப்பட்டவர்கள் நீங்கள் என்று நினையுங்கள். களத்தில் இறங்குங்கள், கடவுள் உங்களுக்கு அருள்வார். என்னை விட்டுவிடுங்கள், கண்காணாதபடி என்னைத் தூக்கியெறிந்துவிடுங்கள். புதிய லட்சியத்தை, புதிய கோட்பாட்டை, புதிய வாழ்க்கையைப் பிரச்சாரம் செய்யுங்கள். எனது வீரமிக்க, உறுதியான, அன்பு நிறைந்த குழந்தைகளே, அனைவருக்கும் எனது ஆசிகள்.

Monday, July 03, 2006

அப்பா

எனக்கு கவிதை எழுத வராது. இருந்தாலும் அவ்வப்போது மனதில் பொங்கும் உணர்வுகளை ஞாபக ஏட்டில் பதிந்து வைப்பது வழக்கம். உரைநடையில், ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி கவிதை என்று எனக்கு நானே திருப்தி பட்டுக்கொள்வேன்.

இன்று முதன்முதலில் எனது வலைப்பதிவை தொடங்குகிறேன். அதுவும் என் தாய்மொழியில். பேனா வாங்கினால் முதலில் "அப்பா" என்று எழுதி பார்ப்பது எனது வழக்கம். இந்த முதல் பதிவையும் அப்பா என்றே தொடங்குகிறேன், 'அந்த ஒரு நாளில்' என் ஞாபகத்தில் கிறுக்கிய ஒரு கவிதையுடன் ...

சுற்றிலும் அழுகைக் குரல்கள்--
பயமாக இருந்தது.
அப்பா நானும் உங்களுடன்
வருகிறேன் என்றேன்.
இங்கேயே இரு இப்போது
வந்துவிடுவேன் எனச் சொல்லி
முதல் நாள் பள்ளியில் எனை
விட்டுச் சென்றீர்கள்.

கலங்கிய விழிகளுடன் காத்திருந்தேன்
நெடு நேரம் கழித்து வந்தீர்கள்
சொன்னபடி அழைத்துச் சென்றீர்கள்.

இப்போதும்,
சுற்றிலும் அழுகைக் குரல்கள்--
கலங்கிய விழிகளுடன் காத்து
இருக்கிறேன்.
எப்போது வருவீர்கள் அப்பா ?