Wednesday, November 15, 2006

பாடை கட்டுங்கள் கோக் பெப்சிக்கு

என் தந்தையார் சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை மேற்கொண்டிருந்த காலம். Dialysis செய்ய ஆரம்பித்த புதிது. ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே உட்கொள்ள அனுமதித்திருந்தனர். மாத்திரைபோடுவது, பழச்சாறு / காபி உட்பட இவை அனைத்தும் இதில் அடக்கம். பின்னர் 500 மி.லி என்று குறைத்து கிட்டத்தட்ட 100 Dialysis முடியும் போது வெறும் 150 மி.லி மட்டுமே அனுமதித்திருந்தனர். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 25 மாத்திரைகள் இதில் போடவேண்டும். மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது இப்படிச் சொன்னார், "சரவணா, அனுமதித்திருக்கும் அளவிற்கு மேல் தண்ணீர் குடித்தால், உயிர் போய்விடும் என்றால், பரவாயில்லை, ஒரு சொம்பு தண்ணீர் கொடுங்கள். ஆசை தீர குடிக்கிறேன். உயிர் போனாலும் பரவாயில்லை. மனிதனை அதை சாப்பிடாதே, இதை சாப்பிடாதே என்று கட்டுப்படுத்தலாம். ஆனால் தண்ணீர் கூட அவனுக்கு கிடைக்காமல் இருப்பது மிகப் பெரிய தண்டனை." தண்ணீர் தாகத்துடனேயே அவர் மரணம் அடையும்படி ஆயிற்று.

ஒரு சொட்டு தண்ணீருக்காக ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக் கொள்ளும் காலத்தினை நோக்கி இந்நாட்டு மக்களை பிடறியில் அடித்து பன்னாட்டு கம்பெனிகள் தள்ளிக் கொண்டிருக்கின்றன. அப்படி தள்ளப்படுவதை மத்திய மாநில அரசுகளும், ஓட்டு பொறுக்கி அரசியல் தலைவர்களும் ரசித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய பன்னாட்டு கம்பெனிகளில் முதலிடத்தில் இருப்பன கோக் மற்றும் பெப்சி.

கோக் மற்றும் பெப்சி இவற்றை முற்றாக புறக்கணியுங்கள் என்பது ஏதோ அந்நிய நாட்டு பொருட்களை அனைத்தையும் புறக்கணிப்பது என்ற சுதேசி-விதேசி கோட்பாட்டு வறட்டுத் தவளை கோஷம் என்ற ரீதியிலேயே மக்களால் உணரப்பட்டு வருவதாக கருத இடம் உண்டு. மாறாக இந்நிறுவனங்களின் தார்மீக கொள்கை, பலநாடுகளில் இவர்கள் பின்பற்றும் பணியாளர் விரோத தொழிற்கொள்கை, இயற்கை வளங்களை பகாசுர வெறியோடு சுரண்டியும் சுற்றுப்புறச்சூழலுக்கு பெரும் கேட்டினை விளைவிக்கும் தயாரிப்பு முறைகளையும், இவர்கள் தொடுக்கும் கலாச்சார சீர்கேட்டு தாக்குதல்களையும் முன்நிறுத்தி பார்க்க வேண்டும் என்பதே கட்டுரையின் நோக்கு.

கோக் மொத்தம் 195 நாடுகளில் தனது ஆக்டபஸ் கரங்களை விரிவுபடுத்தி மொத்தம் 20 பில்லியன் டாலர்களை அள்ளிக்கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டு அறிக்கையில் கோக் பின் வருமாறு முழங்கி இருந்தது.
"கோகோ கோலா குடும்பத்தினராகிய நாம் ஒவ்வோரு நாள் கண்விழிக்கும் போதும், உலகின் 5.6 பில்லியன் மக்கள் அனைவரும் அன்றைய நாள் தாகம் கொள்வார்கள். இந்த மக்கள் அனைவரையும் தாகம் தீர்த்துக் கொள்ள கோக் தவிர வேறு வழியில்லை என்று செய்து விட்டால், பின் பல நீண்ட காலங்களுக்கு நம் எதிர்காலம் நிச்சயமானதான ஒன்றாகி விடும். வேறு எந்த மாற்றும் இல்லை."

அதாவது மக்கள் அனைவருக்கும் தண்ணீர் என்பதையே இல்லாததாக்கி விடும் ஒரு கொடூரமான லட்சியம்.

சர்வதேச அளவில் கோக் தனது தயாரிப்பான Bon Aqua என்ற போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்ய ஆரம்பித்த போது பெப்சி Aquafina என்ற பெயரில் தண்ணீரை விற்க ஆரம்பித்தது. இந்தியாவில் கோக் Kinley என்ற பெயரில் தண்ணீர் வியாபாரம் செய்கிறது. எந்த அமைச்சரவை கூட்டமாகட்டும், அரசியல் கூட்டமாகட்டும், மேசைகளில் தவறாமல் Aquafina அல்லது Kinley இடம் பெற்றுவிடும். தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது உதிர்க்கும் கேவல வெடிச் சிரிப்பின் பின்னணியில் மின்னும் Aquafina வெகு பொருத்தம்.

இந்தியாவில் 104.4 மில்லியன் டாலர்கள் என இருந்த தண்ணீர் வியாபார சந்தை ஆண்டுக்கு 50 முதல் 70 சதவீத பிரமாண்ட வளர்ச்சி பெற்று வருகிறது. 1992 முதல் 2000 வரை இடைபட்ட காலத்தில் 95 மில்லியன் லிட்டராக இருந்த விற்பனை 932 மில்லியன் லிட்டரை எட்டி தற்போது 4 பில்லியன் லிட்டராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கோக்கின் அநியாய நிலத்தடி நீர்ச் சுரண்டல் பிளாச்சிமட மக்களால் தான் பெரிய அளவில் அம்பலப்படுத்தப்பட்டது. இங்கு கோக் தனது 6 ஆழ் துளைகிணறு மூலம் நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியது. இதன் காரணமாக அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென அதள பாதாளத்திற்கு சென்றது. பத்தடி என்று இருந்த நீர்மட்டம் நூறு அடிக்கு மேல் சரிந்து, முன்னூறு அடிக்குப் போனது. இந்த பகுதியில் பொதுமக்களின் தண்ணீர் தேவைக்காக அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்பட்ட 260 ஆழ்துளாய்க்கிணறுகளும் வற்றிப் போயின. இவை மட்டுமல்ல இந்நிறுவனக் கழிவுகள் வெளியே கொட்டப்பட்டு மழைக்காலத்தில் அவை பக்கத்து வயல்களில் கலந்ததால் அந்நிலங்கள் மலடாகியதுடன், பல்வேறு நோய்களும் பரவ ஆரம்பித்தன. அப்பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தினை வலுப்படுத்தினார்கள். பெருமாப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன் என்பவருக்கு 30 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து போராட்டத்தை அமுக்கப் பார்த்து படுதோல்வி கண்டது கோக். பெருமாப்பட்டி பஞ்சாயத்து நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது.

கோக்கின் இணைய தளம் பொய்யான தகவலைக் கொண்டிருக்கிறது. 6 ஆழ்துளைக் கிணற்றில் மூன்று மட்டுமே இயங்கும் என்றும், அவற்றிலிருந்து 0.5 மில்லியன் லிட்டர் மட்டுமே எடுக்கப்படுவதாக சொல்கிறது. ஆனால் கேரள மாசு கட்டுப்பாடு வாரியம் 1.5 மில்லியன் லிட்டர் என்கிறது. India Resource Center தனது அறிக்கையில் 3.5 மில்லியன் லிட்டர் என்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் நீதிமன்றத்தில் கோக் இந்த எண்ணிக்கை எதையும் எதிர்க்கவேயில்லை என்பது. எனில், இதற்கு என்ன பொருள்?

2003ம் ஆண்டு இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பில் "மக்களுக்கு என்று இருக்கும் தண்ணீர், போன்ற இயற்கை வளங்களுக்கு அரசாங்கம் என்பது பாதுகாவலனாக இருக்க வேண்டுமே தவிர, அவற்றை தனியாருக்கு தாரை வார்க்கும் (கேடுகெட்ட) வேலையை செய்யக் கூடாது" என குட்டு வைத்தது. மாத்ருபூமியில் வீரேந்திர குமார் பின்வருமாறு எழுதினார். "மக்கள் தலைநிறைய நீர்க்குடங்களை தூர இடங்களில் இருந்து கொண்டு வரும் அதே நேரத்தில் கோக் நிறுவனத்திலிருந்து லாரி நிறைய குளிர்பானங்கள் வெளியே செல்கிறது."

தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்று நீரை மேய்ந்து கொள்ளுமாறு ஏற்கனவே கோகோ கோலா நிறுவனத்தை 32 பற்களும் தெரிய இளித்து வரவேற்றுக் கொண்டது தமிழக அரசு. கங்கைகொண்டான் பகுதியில் தொழிற்சாலை அமைத்துக் கொள்ள கோக்கின் பினாமியான South Indian Bottling Company Ltd. ( SIBCL ) என்ற நிறுவனத்தை அனுமதித்தது அரசு. ஏற்கனவே கோக்கின் யோக்கியதை புழுத்து நாறிப்போனதால் எதிர்ப்புகளை சமாளிக்க SIBCLன் பெயர் முகமூடி அணிந்து கொள்ளப்பட்டது. நாளொன்றுக்கு 900,000 லிட்டர் தண்ணீரை தாமிரபரணியில் இருந்து உறிஞ்சிக் கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் கோக் மக்களிடம் தாங்கள் 500,000 லிட்டர் மட்டுமே எடுக்கப்போவதாக சொல்வது தகிடுதித்தம். நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டர் என்பது ஏறக்குறைய 20,000 மக்களின் தினசரி தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்யவல்லது. இந்த 10 லட்சம் லிட்டர் தண்ணீரில் கோக் உபயோகம் போக மீதி 7 லட்சம் லிட்டர் கழிவு நீராக மறுபடியும் சுற்றுச்சூழலில் கலக்கப்படும் பயங்கரத்தையும் நாம் உணர வேண்டும். பிளாச்சிமடத்தில் கோக் வெளியேற்றிய கழிவுகளில் கேட்மியம் (cadmium) என்ற கேன்சரை உருவாக்கும் வேதிப்பொருள் 'பாதுகாப்பு' அளவை விட சுமார் 400 முதல் 600 மடங்கு அதிகமாக இருந்தது.

தாமிரபரணியில் தண்ணீர் வளம் ஏற்கனவே பற்றாக்குறையில் தான் உள்ளது. தாமிரபரணியின் கரையோரத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குடிநீருக்காக நெடுந்தூரம் நடைபயணம் செல்வதை இன்றும் காணமுடியும். அப்படி இருக்கையில் கோக்கின் அநியாயச் சுரண்டலை எங்ஙணம் அனுமதிக்க முடியும்? இந்த பிரச்சினையில் ம.க.இ.க., பு.வி.மு ஆகிய அமைப்புகள் காட்டிய தீவிர எதிர்ப்பில் நூற்றில் ஒரு பங்கு கூட ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் காண்பிக்கவிலை என்பது முகத்தில் அறையும் நிஜம்.

ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும் ஏற்கனவே கோக், பெப்சி இவைகளின் தண்ணீர்ச் சுரண்டல் நடைபெற்று வருகின்றன. உத்திர பிரதேச மாநிலம் 'மேதிகஞ்ச்' எனும் இடத்தில் கோக் தொழிற்சாலையினால் 3 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்கள் அனைத்தும் நீர் இன்றி வரண்டன. ராஜஸ்தான் மாநிலம் 'காலதீரா' எனும் பகுதியிலும் கோக்கினால் தண்ணீர் உறிஞ்சப்பட்டது. இந்த இரண்டு பகுதியையும் சேர்ந்தவர்கள் இணைந்து 'நீர் அதிகார யாத்திரை' மேற்கொண்டு போராடி வருகின்றனர். இவை தவிர திருவள்ளுவர் மாவட்டத்திலுள்ள நேமம், ஆந்திராவின் கம்மம் ஆகிய பகுதிகளும் கோக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கோக் மற்றும் பெப்சி நிறுவனம் மூலம் அநேக பேர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. கங்கைகொண்டானில் 200 பேருக்கு வேலை கொடுத்திருப்பதாக கோக் கூறியது. SIBCLன் மூலதனம் 28 கோடி ரூபாய். எனில், ஒரு பணியிடத்திற்கு ரூ.14 லட்சம். ஆனால் பெரும்பான்மையான மூலதனம் இயந்திரங்களில் செய்யப்பட்டது. அதாவது மனிதர்களால் செய்ய முடிந்த பல வேலைகளுக்கு இயந்திரம். இதைவிட பெரிய தொழிற்சாலையான பிளாச்சிமடத்தில் வெறும் நூறு பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் வெளி இடங்களிலிருந்து வந்தவர்கள். அப்பகுதி மக்கள் தினக்கூலிகளாக தற்காலிக அடிப்படையில் வேலை செய்தனர். அவர்களில் ஒரு நாள் சம்பளம் ரூ.40

கோக் பெப்சி போன்ற குளிர்பானங்கள் அதைக் குடிக்கும் மக்களை அதற்கு அடிமைப்படுத்தும் இரசாயணங்கள் கொண்டதாக உள்ளன. இதைக் குடிக்கும் சிறார்கள், அளவிற்கு அதிகமாக உப்பி பருத்து, நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களாக ஆகின்றனர். சில அறிவுஜீவிகள் உணவு முடிந்து கோக்/பெப்சி பானம் பருகும் பழக்கம் உடையவர்களாக மாறிவிட்டனர். கேட்டால் ஜீரணத்திற்கு என்பர். இப்பானம் குடித்தவுடன் 'ஏவ்' என பெரு ஏப்பம் வருவது வெறும் உட்சென்ற காற்றினால் அன்றி ஜீரணத்தினால் அல்ல. பழச்சாறு, மோர் அல்லது மிளகுரசம் இவை ஜீரணத்திற்கு உதவும்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் கடைகோடியில் இருக்கும் எனது கிராமத்தில் கூட (மின்சாரம் வந்து வெறும் எட்டாண்டுகள் ஆகிறது), "இந்தாங்கப்பு கலரு" என கோக் விருந்துபசாரம் நடக்கிறது. கோக்கும் பெப்சியும் ஒரு அந்தஸ்தின் அடையாளமாக இங்கு கொள்ளப்படுகிறது. பாரம்பரிய பானங்களான இளநீர், பால், மோர், எலுமிச்சைச் சாறு, கேழ்வரகு கஞ்சி ஆகியன வழக்கொழிந்து போய் வருகிறது. இவற்றில் அடங்கியிருக்கும் விட்டமின்களும் தாது உப்புகளும் சிறிதும் இல்லை குளிர்பானங்களில்.

நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது நீர் என்பது மிகப்பெரிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. 1991ல் வளைகுடாப் போர் நடந்தபோது, அணைகள் மீது அமெரிக்கா குண்டு வீசி, குடிக்கக் கூட நீர் கிடைக்காமல் செய்தது. இராக் போரிலும் அமெரிக்கா பாக்தாதின் நீர் அளிப்பை முதலில் தாக்கியது. 1999ல் நேட்டோ குண்டு வீசி, யூகோஸ்லாவியாவின் நீரை முழுவதுமாக மாசுபடுத்தியது. இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு குடிநீர் கிடைக்காத வண்ணம், குடிநீர்க் குழாய்களைக் குறிவைத்து தாக்கியது. இப்படி பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். தற்போது இந்தியாவில் தண்ணீர் வளத்தினை முற்றிலுமாக உறிஞ்சி துடைத்துவிடும் முயற்சியில் கோக்/பெப்சி குளிர்பான நிறுவனங்களும் பன்னாட்டுத் தண்ணீர் வியாபாரிகளும் பகிரங்காமாக போர் தொடுத்திருக்கிறார்கள். முற்றிலும் தண்ணீர் வற்றிப்போய்விட்டால்?? இருக்கவே இருக்கிறது வேறொரு நாடு அவர்களுக்கு. முதுகெலும்பில்லாத மனிதர் நிறைந்த நாடுகளுக்கு உலகில் பஞ்சமா என்ன !!

ஒவ்வொரு போத்தல் குளிர்பானத்திலும் பூச்சி கொள்ளி மட்டுமல்ல விவசாயிகளின் கண்ணீர், குடிக்கவும் தண்ணீர் இழந்த எம்மக்களின் இரத்தம் ஆகியனவும் சரிவிகிதத்தில் கலந்துள்ளன. இத்தனைக்கும் பின்னரும் "சாரி பாஸ், கோக் குடிக்காமல் என்னால் இருக்க முடியாது" என்று சொல்பவர்கள், எட்ட நில்லுங்கள். வருங்கால சந்ததியினர் உங்கள் முகத்தில் உமிழும் எச்சில் படாத தூரத்தில்.




மேலதிக புரிதலைப்பெற தோழர் அசுரனின் பதிவுகள் இங்கே:
அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்
அக்காமாலா, கப்ஸியும் - இம்சை அரசன் துன்பமணியும்
மற்றும்
தண்ணீர்: தாகத்திற்கா இலாபத்திற்கா?
'கோக்': அடிமைத்தனத்தின் சுவை
கடல் நீர் தனியார்மயம், காற்றும் ஆகலாம் எதிர்காலத்தில்
நீரில் வணிகம், 'நீர் இல்' துயரம்

Monday, November 06, 2006

நல்ல ஓர் கவிதை

சிவசேகரம் அவர்களின் பின்வரும் கவிதையினை நான் படிக்குமாறு நேர்ந்தது. ரொம்பவும் சிந்திக்க கவிதை தனை தமிழ்மணத்தில் வைக்க பிரியப்படுகிறேன்.

சட்டமும் சமுதாயமும்
சி. சிவசேகரம்

சட்டம்
நிபுணர்களதும் நீதவான்களதும் வழக்கறிஞர்களதும்
காவற் துறையினரதும் கைகளில் பத்திரமாகவே உள்ளதால்
கையும் மெய்யுமாக அகப்பட்ட கள்வனால்
சட்ட நுணுக்கங்களின் இடைவெளிகளில் நுழைந்து
தப்பி ஓட இயலுமாகிறது
பட்டப் பகலில் நடுத் தெருவிற் கொலை செய்தவன்
சட்ட நூலேணியிலேறி நழுவ முடிகிறது
குடிவெறியில் காரோட்டிய யம தூதனை
அளவோடு குடி என்று
செல்லமாய்க் கண்டிக்க நீதவானுக்கு முடிகிறது.
சட்டம் இருக்க வேண்டிய இடத்தில்
இருக்க வேண்டியவர்களின் வசம் இருக்கிறது.
அதை வைத்திருக்கிறவர்கள்
இருக்கிறவர்களின் கையில் இருக்கிறார்கள்.
சட்டம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தும்
உரிய வேலையைச் செய்ய வில்லை என்றெண்ணி
ஒரு பெண்ணை பஸ் மோதிக் கொன்றதற்காகச்
சட்டந் தெரியாதவர்கள்
பஸ்களை நொறுக்கி நீதி வழங்கினார்கள்.
அப்போது
சட்டத்தைக் கவனமாக வைத்திருக்கிறவர்கள்
“மக்கள் சட்டத்தைத் தம் கையிலெடுப்பது
தவறு” என்று கண்டித்தார்கள்.

மக்கள் உண்மையிலேயே சட்டத்தைத் தம் கையில்
எடுத்துக் கொள்வார்களேயானால்,
எவ்வளவு நன்றாக இருக்கும்.