Monday, July 03, 2006

அப்பா

எனக்கு கவிதை எழுத வராது. இருந்தாலும் அவ்வப்போது மனதில் பொங்கும் உணர்வுகளை ஞாபக ஏட்டில் பதிந்து வைப்பது வழக்கம். உரைநடையில், ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி கவிதை என்று எனக்கு நானே திருப்தி பட்டுக்கொள்வேன்.

இன்று முதன்முதலில் எனது வலைப்பதிவை தொடங்குகிறேன். அதுவும் என் தாய்மொழியில். பேனா வாங்கினால் முதலில் "அப்பா" என்று எழுதி பார்ப்பது எனது வழக்கம். இந்த முதல் பதிவையும் அப்பா என்றே தொடங்குகிறேன், 'அந்த ஒரு நாளில்' என் ஞாபகத்தில் கிறுக்கிய ஒரு கவிதையுடன் ...

சுற்றிலும் அழுகைக் குரல்கள்--
பயமாக இருந்தது.
அப்பா நானும் உங்களுடன்
வருகிறேன் என்றேன்.
இங்கேயே இரு இப்போது
வந்துவிடுவேன் எனச் சொல்லி
முதல் நாள் பள்ளியில் எனை
விட்டுச் சென்றீர்கள்.

கலங்கிய விழிகளுடன் காத்திருந்தேன்
நெடு நேரம் கழித்து வந்தீர்கள்
சொன்னபடி அழைத்துச் சென்றீர்கள்.

இப்போதும்,
சுற்றிலும் அழுகைக் குரல்கள்--
கலங்கிய விழிகளுடன் காத்து
இருக்கிறேன்.
எப்போது வருவீர்கள் அப்பா ?

2 comments:

Divya said...

ஒரு அப்பாவின் மறைவை வெளிபடுத்தும் உங்கள் வரிகள் மனதை கணமாக்கியது

சேதுக்கரசி said...

அழவைத்துவிட்டது கவிதை