நந்தினி என்ற அந்தப் பிஞ்சுக் குழந்தை தனது உயிரை விலையாகக் கொடுத்து அரசாங்கத்தை விழித்து எழச் செய்துள்ளது.
தொடக்க கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ள புதிய உத்தரவில் இடம் பெற உள்ள முக்கிய அம்சங்கள் ஆவன:
# நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளிகள், சிறுவர்-சிறுமிகளை சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு முன்னதாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடமோ அல்லது உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடமோ கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.
# பள்ளியின் பெயர், சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் சிறுவர், சிறுமிகள் பற்றிய விவரம் சுற்றுலா செல்லும் இடங்கள் சிறுவர்களுடன் செல்லும் ஆசிரியர்களைப் பற்றிய விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய மனுவை, அதிகாரிகளிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.
# அதற்கு கல்வித்துறை அலுவலர் அனுமதி அளித்தால் மட்டுமே குழந்தைகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல முடியும். அனுமதி மறுத்தால் சுற்றுலா செல்லக் கூடாது. அப்படி மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
# அதன்படி, தினமும் ஒரு ஆசிரியர் பள்ளி வளாகத்தைச் சுற்றி பார்வையிட்டு, வளாகத்தில் உள்ள குறைகளை தனி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். குறைகளில் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும். கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது, மேற்கண்ட பதிவேடுகளைக் காட்ட வேண்டும்.
இந்த உத்தரவுகள் விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட உள்ளன, என இன்றைய தினமலர் செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளது.
வழக்கம் போல 'கடுமை' உத்தரவோடு மட்டும் நின்றுவிடாமல் அதை செயல்படுத்துவதிலும் தொடரவேண்டும்.
அதோடு மட்டுமல்லாமல், ஆரம்பப்பள்ளிக் குழந்தைகளின் போக்குவரத்திற்கான ஏற்பாடுகளை பள்ளிகள் கட்டாயம் செய்தாக வேண்டும். கட்டணத்தை அரசாங்கமே நிர்ணயம் செய்யவேண்டும். அதை மீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது மாநகர போக்குவரத்துக் கழகம் "மகளிர் மற்றும் சிறுவர்களுக்கென தனிப்பட்ட சேவைப் பேருந்துகளை அங்கொன்றும் எங்கொன்றுமாக ஏதோ பெயரளவில் இயக்குகிறது.
பள்ளி ஆரம்பிக்கும் மற்றும் முடியும் நேரங்களில் அதிகளவு பேருந்துகளை "பள்ளி மாணவர்களுக்கு" மட்டும் என இயக்க வேண்டும். பேருந்து நடத்துனருக்கு குறிப்பாக பள்ளி மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற நடத்தை நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
பள்ளிகளின் நிர்வாகக் குறைபாடு மற்றும் விதிமுறை மீறல் ஆகியவற்றின் மீதான வழக்குகளுக்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து விரைவில் தண்டனை வழங்க வேண்டும். நீதிமன்றம் மனது வைத்தால் இதைச் செய்ய முடியும். சமீபத்தில் கொலை வழக்குகளுக்கு பல்வேறு நீதிமன்றங்கள் பதினைந்து நாள், பத்து நாள், இரண்டு நாள், ஏன் -- ஐந்து மணிநேரத்தில் தீர்ப்பளித்து 'சாதனை' படைத்ததாக செய்திகள் வருகின்றன. கும்பகோணம் தீ விபத்து பற்றிய வழக்கு நேற்றைக்கு கூட விசாரணைக்கு வந்து மீண்டும் 'தள்ளிவைக்கப்பட்டுள்ளது'. ஆண்டுகள் இரண்டு கடந்து போய்விட்டன.
நந்தினி, இனி இது போன்ற மரணம் ஒரே ஒரு குழந்தைக்கும் நேராது பார்த்துக் கொள்வோம் மகளே!
Friday, October 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல செய்திதான். வெறும் அரசாணைகளோடு நின்று விடாமல் இருந்தால் சரி!
//வெறும் அரசாணைகளோடு நின்று விடாமல் இருந்தால் சரி//
சரியாக சொன்னீர்கள் நாமக்கல் சிபி. நன்றி
Post a Comment